Friday, February 26, 2010

உனக்காக ..

கனவுகளற்ற உலகில்
நித்தம் தோன்றும்
நினைவுகளுடன் மட்டும்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
உன்னை காணும் வரை ..

புழுக்கம் நிறைந்த இரவில்
ஜன்னலைத் திறந்த உடனே
தன்னை ஸ்பரிசிக்கச் செய்ய
என்னைத் தீண்டிச் செல்லும்
இதமான தென்றலைப் போல்
என் முன்னே வந்தாய்
ஒரு சுப நாளில்..

மாலை நேரத்தில் ,
கடற்கரையோரம்
அலைகள் காலை வருட,
தனிமையில் அமர்ந்திருக்கும் நேரம்,
அறிவிப்பின்றி திடீரென்று வந்த
மெல்லிய தூரலில்
நனைந்தது போல் இருந்தது அன்று ..

சுவாசம் கொள்ளும்
ஒவ்வொரு முறையும்
யோசிக்க வைத்தாய்
"இந்நேரம் நீ என்ன
செய்து கொண்டிருப்பாய்" என்று ..

பட்டாசு வெடிக்க
ஆசைப்படும் குழந்தைக்கு
தீபாவளி தினத்தை நினைத்தால்
தோன்றும் எதிர்பார்ப்புகளுடன்
காத்திருக்கின்றேன்
ஒவ்வொரு நிமிடமும் ,
உனக்காக..

நீ இன்றி ..

நீ

இல்லாத வாழ்க்கை

நிழல்
இல்லாத வெயில்காலம் ,

வழி மறந்த
நாய்க்குட்டி ,

வேர் இறந்த
மரம் ,

சிறகு இல்லாத
பறவை ,

பனி மறந்த
மார்கழி மாதம் ,

கண் இழந்த
ஓவியன் ,

பதில் அழிந்த
விடைத்தாள் ,

முடிவு இல்லாத
மரணம் ...

Wednesday, February 24, 2010

கடிதம் - 1

நீ பார்க்கும்
நேரங்களில் எல்லாம்
பூக்கள் பூக்கிறது
எனக்குள் ,

அவை தான்
உன்னை காணாத
நாட்களில் ,
எனது கல்லறையை
அலங்கரிக்கின்றன ..

Monday, February 15, 2010

முதன் முதலாய் ..

வெயில் காலம் முடிந்து
முகத்தில் விழுந்த
முதல் மழைத்துளி ,

வெளிநாட்டு பயணம்
முடித்து உண்ணப் போகும்
அம்மா சமைத்த
முதல் பருக்கைச்சோறு ,


களை மட்டும் விளைந்த நிலத்தில்
கண்டெடுத்த முதல் நெற்கதிர் ,

இறந்துபோன மனதில் பிறந்த
முதல் சினேகம் ,

இவை யாவும் மீறிய
பரவசத்தை உணர்ந்தது ,
நாம் அறிமுகம் கொள்ளாத
முதல் நாளில்
என்மீது படர்ந்த உன் பார்வையில் ..

Thursday, February 11, 2010

நட்பு ..

முன்பின் தெரியாமலே
முகத்தில் பூத்த புன்னகை
வழியாக அறிமுகமாகி ,

" எங்கப்பா புல்லட்
வெச்சிருக்காரு தெரியுமா..?"
"ஹூம் , எங்கப்பா
புல்லட் கடையே
வெச்சிருக்காரு தெரியுமா ..?"
என்று அப்பா ஜம்பம் அடித்து
பேசத் தொடங்கி ,

பக்கத்து வீட்டு ஜன்னலை
புதுப்பந்தால் பதம் பார்த்து ,
"நான் இல்லே , இவன் தான் " என
சிலமுறை தனக்காக உண்மையும் ,
"இவன் இல்ல , நான் தான் " என
சிலமுறை நண்பனுக்காக பொய்யும் சொல்லி ,

ஒன்றாக வசவு வாங்கி ,
ஒன்றாக மறந்து ,
மீண்டும் இன்னொரு வீட்டு
ஜன்னலை குறிவைக்காமலேயே
உடைத்து ,

எதிர் வீட்டு மாமரத்தில் பறித்த
திருட்டுமாங்காயில் உப்பு சேர்த்து
"உச்சு " கொட்டி சாப்பிட்டு,

தெருமுனை டீக்கடையில்
எந்த சந்தோஷத்தையும்
1 /2 ஆக்கி ருசித்து ,

ஒரே காலேஜில் சீட் வாங்கி ,
ஒன்றாக ஊர் சுற்றி ,
பிரின்சிபால் பெண்ணை
பார்க்கும்போதெல்லாம்,
"டேய் , நம்ம பிரின்சிபால் மாமா
ரொம்ப நல்லவருடா , இல்ல "
என்று அவள் கேட்கும் படியே
கமெண்ட் அடித்து ,

ஒன்றாக அரியர்ஸ் வைத்து ,
ஒன்றாக அடுத்த அட்டெம்ப்டில் பாசாகி ,
காலை , மாலை என
ஷிப்டு போட்டு வேலை தேடி ,

கிடைத்த வேலைக்காக
வெவ்வேறு ஊர்களுக்கு சென்று ,

வருடங்கள் கடந்து,

பத்தாம்கிளாசில் படித்த
முருகன் கல்யாணத்திலோ ,
காலேஜ் சீனியர்
அம்மா மரணத்திலோ
மீண்டும் பார்த்து ,

சடங்குகள் எல்லாம் முடித்த பின்னர் ,
நொடிகள், நிமிடங்கள் , மணிகள்
எல்லாம் மறந்து ,
பழைய கதை பேசி ,

பிரியும் நேரம் மனதிற்குள்ளேயே
அழுகாச்சி காவியம் வடித்து ,

வீடு திரும்பிய பின்னர் ,
கண்களின் ஓரம்
லேசாக சிந்தும்
அந்த தூறல் தான் ,

" நட்பு "

என் அப்பா..

என் பிள்ளைக்காக
வாழ ஆசைபடும்
எனது எதிர்கால நாட்களின்
நிகழ் காலம் நீ..

கோடி ரூபாய்
கொட்டித் தந்தாலும்
எனக்காக செலவு செய்ய
போதாது உனக்கும் ,
தனக்கென்றே சேர்த்து வைக்கத்
தெரியாத உன் கணக்குக்கும் ..

தெரியாத வழியில்
நான் சென்றால் கூட
புதையல் தான் கிடைக்கும் ,
"பத்திரமாய் போய்ட்டு வாப்பா"
என்று கூறும் உன் அக்கறை
என்னுடன் இருக்கும் பொழுது ..

நான் கேட்கும்முன்னே
எனக்குத் தேடித் தேடி
நீ சேர்த்த பொக்கிஷங்கள் எல்லாம்
எனக்காகத் தேய்ந்து போன
உன் பாத ரேகைகளுக்கு
ஈடாகுமா .. ??

எப்பொழுதும் என்னுடன்
இருக்க ஆசைப்படுவதால்
நீயும் எனக்கு ஒரு நிழல் தான் ,
என் சுமை கூடாதிருக்க
உன் உருவம் தொலைத்த
என் கருப்பு நிழல் ..

என் தேவதையே ..

எனது கவலைகள் யாவும்
உன் உதட்டோர சிரிப்பில்
மறந்திட வேண்டும் ..

உனை மறந்து
நீ அழும் போது
என் தோள் தந்து நான்
ஆறுதல் தர வேண்டும் ..

உன் மடி மீது
தூங்கும் நேரத்தில்
கருவில் இருக்கும்
குழந்தையின் இதத்தை
நான் உணர வேண்டும் ..

நிலவு இல்லாத நாட்களிலும்
நிலவே , உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்ட
நீ கேட்க வேண்டும் ..

என் மீது படர்ந்து
என்னன்னோவோ
நீ பேச ,
உனக்காக நான்
விழித்திருக்கும் போது ,
உன்னை மறந்து
நீ தூங்கும் நிமிடங்களும்
கவிதையாகத் தான்
எனக்கு தெரிய வேண்டும் ..

அப்பமாக இருந்தாலும் சரி ,
அமிர்தமாக இருந்தாலும் சரி ,
எச்சில் படுத்தி நீ தந்த
பின் தான் நான் உண்ண வேண்டும் ..

சின்ன , சின்ன
சண்டைகளுக்கு பிறகு ,
தோன்றும் சமாதானத்தில்
நமது உறவு மேலும்
வளப்பட வேண்டும் ..

இவை யாவும் நடக்க
நீ என் மகளாக
பிறக்க வேண்டும் அம்மா ,
என் மறு ஜென்மத்தில்..